வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு கழிவுநீர் கால்வாய் வழியாக வரும் மழை நீரை விரைவில் வெளியேற்ற கூடுதல் கவனம் மேற்கொள்ளும் மேயர் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ஆட்டோ காலனியில் பாதாள சாக்கடை உந்து நிலையத்தில் திறன் கூடிய மின் மோட்டார் அமைக்கும் பணி தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்; “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ஆட்டோ காலனி, டோபி கானா, லெவிஞ்சிபுரம், புதிய பேருந்து நிலையம், செல்வநாயகபுரம் மற்றும் சத்திரம் ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் பாதாள சாக்கடை உந்து நிலையங்களில் திறன் கூடிய புதிய மின் மோட்டார்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக சிதம்பரம் நகர் ஆட்டோ காலனியில் இயங்கிவரும் பாதாள சாக்கடை உந்து நிலையத்தில் திறன் கூடிய மின் மோட்டார் அமைக்கும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக மேயர் தெரிவித்தார்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் வான்மதி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

