விளாத்திகுளம் அருகே சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு மாணவன் மகேந்திரன் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
விளாத்திகுளம் அருகே பொம்மையாபுரத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மகேந்திரன் (12) இவர் சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பள்ளி இடைவேளை நேரத்தின் போது சிறுநீர் கழிக்க சென்று விட்டு வரும்போது பள்ளி வளாகத்தில் இருந்த நாவல் பழ மரத்திலிருந்து கீழே விழுந்து கிடந்த நாவல் பழங்களை எடுத்து சாப்பிட்டு தண்ணீர் குடித்தாராம். சிறிது நேரத்தில் மாணவர் மகேந்திரன் பள்ளி வளாகத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதை கண்ட சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்கவே உடனடியாக மாணவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளனர். அப்போது மாணவர் மகேந்திரன் வாந்தி எடுத்துள்ளார். அதில் நாவல் பழங்கள் வெளி வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து தலைமையாசிரியர் மாயா உள்ளிட்ட ஆசிரியர்கள் உடனடியாக அருகில் உள்ள எப்போதும்வென்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவர் மகேந்திரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மாணவர் மகேந்திரனின் பிரேத பரிசோதனை ஆய்வுக்காக தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் கண்ணன் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் வந்து ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக எப்போதும்வென்றான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

