| தூத்துக்குடி உப்பளங்களை கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு ,தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், வியாபாரிகள் கடை அடைப்பு |
தூத்துக்குடி கடலோர பகுதிகளில் நீண்டகாலமாக உப்பு உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், புதிய துறைமுகத்தை ஒட்டி உள்ள முத்தையாபுரம், முள்ளக்காடு, புல்லாவெளி, பழையகாயல் பகுதிகளில் உள்ள உப்பளங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.இதனை கண்டித்து, உப்பு உற்பத்தியாளர் சங்கம் தலைமையில் தொழிலாளர்கள் திருச்செந்தூர் பிரதான சாலையில் அமைந்த முத்தையாபுரம் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் மந்திரமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் சேகர் வரவேற்று, பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் சின்னராஜ், சோட்டை சுப்பையா, முகேஷ் ஷண்முகவேல், சிவாகர், சுயம்பு நாடார், ஸ்ரீராம், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு மதசார்பற்ற ஜனதா தள மாநில துணைத் தலைவர் வக்கீல் சொக்கலிங்கம் தொடங்கி வைத்து, “1937ம் ஆண்டு முதல் இப்பகுதியில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. 1974ம் ஆண்டு முதல் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சம் பேர் வாழ்வாதாரம் பெற்றுள்ளனர். எனவே இந்த தொழிலை அழித்து, வேறு தொழிலை கொண்டு வராமல் மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உப்பு உற்பத்தியாளர் சங்கங்கள், உப்பள தொழிலாளர் சங்கங்கள், மீன்பிடி தொழிலாளர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள், விவசாயிகள் சங்கங்கள், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் பல சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
போராட்டத்திற்கு ஆதரவாக முத்தையாபுரம், முள்ளக்காடு, ஸ்பிக்நகர் சுற்றுவட்டார வியாபாரிகள் தங்கள் கடைகளை அடைத்தனர். சங்க நிர்வாகிகள் முனியதங்கநாடார், ராஜசேகர், தவசிவேல், சின்னதங்கம், அர்ஜுனன், அன்னசேகர், பொன்தனகரன் உள்ளிட்டோர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

