தூத்துக்குடி அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நானும் அரசியலில் இருக்கிறேன் எனும் அரசியல் வெளிச்சத்திற்காக, மறைந்த தலைவர்களின் வரலாறு அறியாமல், அரசியல் நாகரீகம் இன்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருக்கும் மக்களால் அரசியல் பொய்யர் என அழைக்கப்படும் சீமான், இன்றைய அரசியல் தலைவர்கள் குறித்து தரம் தாழ்ந்த பேச்சு நிகழ்த்தியிருப்பது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.
அரசியல் களத்தில் இல்லாத மறைந்த தலைவர்களைப் பற்றி பேசும்போது, அவர்களின் பங்களிப்புகளையும் மரபுகளையும் நினைவுகூர்வது அரசியல் கண்ணியத்தின் ஒரு பகுதி. அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். தமிழக மக்களின் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர் குறித்து சீமான் அவமதிப்பு பேச்சு நிகழ்த்தியிருப்பது மன்னிக்க முடியாத செயல்.
பிரபாகரனையே தலைவராக கொண்டாடியது எம்.ஜி.ஆர்
நீங்கள் தலைவர் எனக் கொண்டாடும் மேதகு பிரபாகரனையே தலைவராக கொண்டாடியது எம்.ஜி.ஆர் என்பதை மறந்துவிட்டீர்களா? அரசியல் தெரியாமல், எங்கள் தலைவர்களின் வரலாறு அறியாமல் இனியும் பிதற்ற வேண்டாம். தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் அது உங்களது அரசியல் அழிவிற்கான தொடக்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மறைந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி அமைப்போம் என்ற லட்சியப்பாதையில் நாம் பயணித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

