December 1, 2025
#தூத்துக்குடி

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலை வீட்டுமனை வழங்கக் கோரி அக்டோபர் 23ல் ஆர்ப்பாட்டம்

30 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கையை நிறைவேற்ற அரசின் கவனத்தை ஈர்க்கும் முயற்சி – பிரஸ் கிளப் முடிவு

தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலை வீட்டுமனை வழங்காததை கண்டித்து, வரும் அக்டோபர் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி பிரஸ் கிளப் செயற்குழு கூட்டம் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில் சங்க செயலாளர் மோகன்ராஜ் வரவேற்புரையாற்றினார்.

கூட்டத்தில், மாநிலத்தின் பல மாவட்டங்களில் பத்திரிகையாளர்களுக்கு அரசு சார்பில் நான்கு கட்டங்களாக சலுகை விலையில் வீட்டுமனை இடங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக இவ்வசதி வழங்கப்படாது குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, வரும் அக்டோபர் 23ம் தேதி காலை 10 மணிக்கு, தமிழக முதல்வர் மற்றும் மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தூத்துக்குடி பிரஸ் கிளப் அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற தீர்மானம் எடுக்கப்பட்டது.

புதிய உறுப்பினர்கள் சேர்க்கை;

மேலும், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஆண்டு  வழங்கியது போல்  ஸ்பான்சர் மூலம் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்புகள் வழங்கவும், புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை பொதுக்குழு ஒப்புதலுடன் மேற்கொள்ளவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் பொருளாளர் ராஜு, துணைத் தலைவர் சிதம்பரம், கௌரவ ஆலோசகர்கள் பாலகிருஷ்ணன், ஆத்தி முத்து மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் குமார், கண்ணன், முத்துராமன், ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.