தூத்துக்குடி உலக புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 443வது ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26 இல் தொடங்கி ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும். தூய பனிமய மாதா ஆலயத்தில் 443-வது ஆண்டு பெருவிழா 26.07.25 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணியளவில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. கூட்டுத் திருப்பலி முடிந்ததும் கொடியேற்ற விழா கோலாகலமாக நடைபெற்றது. பனிமய மாதா உருவம் பொறித்த கொடியை பனிமய மாதா பேராலய அதிபர் ஸ்டார்வின் மற்றும் அருட் தந்தையர்கள் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
அப்போது அங்கு கூடியுருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள்
“மரியே வாழ்க”என விண்ணை பிளக்க முழக்கமிட்டனர். பின்னர் சமாதானச் சின்னமாக வெள்ளை புறாக்கள் பறக்க விடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் செ.ஜெனிட்டா, திமுக மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், உள்பட பலர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பனிமய மாதா சொரூபத்துக்கு பொன் மகுடம் மற்றும் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டுள்ளன. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
விழாவில் வருகிற 3-ந் தேதி நற்கருணை பவனியும், 4-ந் தேதி இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனியும், 5-ந் தேதி நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்குதந்தை ஸ்டார்வின், உதவி பங்குதந்தை பிரவீன் ராசு மற்றும் பேராலய பங்கு செயலாளர் எட்வின்பாண்டி யன், துணைத் தலைவர் அண்டோ, பொருளாளர் ஜோ சோரிஸ், மிக்கேல் அருள்ராஜ் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.
இந்த திருவிழாவையொட்டி 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்த திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்க உள்ளனர்

