December 1, 2025
#தூத்துக்குடி

தவெக புதிய துணை பொதுச் செயலாளர் ஜே.கே.ஆர். சுபத்ரா முருகன், தூத்துக்குடியில் தலைவர்கள் சிலைக்கு மரியாதை

தூத்துக்குடி,தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளராக புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஜே.கே.ஆர். சுபத்ரா முருகன், தூத்துக்குடியில் உள்ள முக்கிய தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி வருகை தரும் தவெக தலைவர் விஜய்க்கு தென் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தவெக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியைச் சேர்ந்த ஜே.கே. ஆர். சுபத்ரா முருகன் தமிழக வெற்றிக் கழக மாநில துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தவெக மாநில துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஜே.கே.ஆர். சுபத்ரா முருகன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றி கழக பொறுப்பாளர் ஜே.கே.ஆர். முருகன் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் 25.09.25 அன்று தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அமைந்துள்ள குரூஸ்பர்னாந்து உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில துணை பொதுச்செயலாளர் ஜே.கே.ஆர். சுபத்ரா முருகன் கூறுகையில்; தனக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் பதவியை அறிவித்த தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும் தமிழக முதலமைச்சராக நடிகர் விஜய் அரியணை ஏறுவார் என தெரிவித்தார்.

தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் தொகுதி பொறுப்பாளர் ஜே.கே.ஆர் முருகன் கூறுகையில்; தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் நடைபெற உள்ளது இந்த சுற்றுப் பயணத்தில் தென் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் டெல்லியே அஞ்சும் அளவிற்கு உள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தவெக தலைவர் நடிகர் விஜய் அரியணையில் ஏற்றுவது தான் எங்கள் தொண்டர்களின் லட்சியம் என ஜே.கே.ஆர்.முருகன் தெரிவித்தார்.