December 1, 2025
#தூத்துக்குடி

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு புரத உணவு வழங்கும் திட்டம், அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு புரதச் சத்து நிறைந்த உணவு வழங்கும் பணியை அமைச்சர் பி.கீதாஜீவன் தொடங்கி வைத்தார். 

அரசு மருத்துவமனைகளில் தினமும் டயாலிசிஸ் சிகிச்சை பெற நோயாளிகள் பலர் வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு புரத சிற்றுண்டிகள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தினசரி 22 பேர்களுக்கு இரண்டு முட்டை, 100 மில்லி பால், 25 கிராம் சுண்டல் கடலை வழங்கும் நிகழ்ச்சியை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில்;

வருகிற ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அன்று மாணவ மாணவிகளுக்கு இலவச புத்தகம் சீருடைகள் வழங்கப்பட உள்ளது. இதுபோல் இந்த ஆண்டு முதல் அங்கன்வாடி மையத்தில் புத்தகம் சீருடைகள் வழங்கப்பட உள்ளது. மாவட்டம் முழுதும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் குழந்தைகளுக்கு சீருடைகள் தயார் நிலையில் உள்ளன.

புதுப்பொலிவுடன் அங்கன்வாடி மையங்கள்

தமிழ்நாட்டில் 54,000 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் 6500 அங்கன்வாடி மையங்கள் கழிப்பறை வசதியுடன் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதில் குழந்தைகளுக்கு புரியும் வகையில் சித்திரங்கள் சுவர்களில் வரையப்பட்டுள்ளன. பள்ளிகளில் மாணவ மாணவிகள் அதிகரிக்கும் வகையில் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது இதனால் மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் அரசு பள்ளிகளுக்கு வந்து சேர்ந்து பயிலுகிறார்கள்.

முன்பெல்லாம் ஆண்டுக்கு மூன்று தடவை குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் காலை உணவு திட்டத்தின் மூலம் பல சத்தான பொருட்கள் சாப்பிடுவதால் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். இதனால் குழந்தைகள் மருத்துவமனைக்கு செல்வது குறைந்துள்ளதாக பெற்றோர்கள் கூறுகிறார்கள்.

இதனால் நடப்பு ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ளது வருகிற ஜூன்-2ம் தேதி காலை திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது என்றார். பேட்டியின் போது அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, கல்லூரி துணை முதல்வர் மருத்துவர் கலைவாணி, திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர் விஜயலட்சுமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்

.