November 28, 2025
#தூத்துக்குடி

கைம் பெண்கள், ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்யும் முகாம் அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடியில் 2ம் கேட்டு அருகில் உள்ள அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் 20.05.25 அன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்திட சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமினை தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்திடும் வகையில் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக “தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம்” அமைக்கப்பட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கைம்பெண்கள். கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் என 838 பேர் நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து

உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 19.05.2025 முதல் 03.06.2025 வரை நடைபெற்று வருகிறது.

இன்றைய சிறப்பு முகாமில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள். முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் சுமார் 172 பேர் கலந்து கொண்டு திறன் பயிற்சி மற்றும் சுயதொழில் போன்ற திட்டங்களில் பயன்பெறும் பொருட்டு நலவாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ளனர்.

மதிப்பு கூட்டப்பட்ட தையல் பயிற்சி முடிந்த பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்

முகாமில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற திட்டத்தின்கீழ் தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம் 40 மகளிருக்கு சுயதொழில் தேவைக்கான திறன் பயிற்சியாக தையல் பயிற்சியுடன் மதிப்புக் கூட்டப்பட்ட பயிற்சி வழங்கப்பட்டது. அப்பயிற்சியனை நிறைவு செய்த மகளிர்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார். மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பித்த 46 நபர்களுக்கு புதிதாக மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், துணை மேயர் செ.ஜெனிட்டா, மண்டல தலைவர் கலைச்செல்வி,

மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் சொர்ணலதா, சமூக நலத்துறை அலுவலர் பிரேமலதா, மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் ஏஞ்சல் விஜய நிர்மலா, கைம்பெண்கள் நல வாரிய உறுப்பினர்கள் வழக்கறிஞர் ஸ்வர்ணலதா, சேவியரம்மாள், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார் எம்.சி, மாமன்ற உறுப்பினர்கள் சரன்யா, ராமு அம்மாள், பேபி ஏஞ்சலின், ஜெயசீலி, வைதேகி, விஜயகுமார், மாவட்ட பிரதிநிதிகள் ராஜ்குமார், நாராயணன், மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாநகர மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி மற்றும் அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.