தூத்துக்குடியில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து பள்ளியில் அமைச்சர் கீதாஜீவன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் நகரப்புறத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த 26 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள நகர்ப்புறத்தில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த காலை உணவு திட்டத்தை பின்பற்றி இந்தியாவில் உள்ள சில மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளிலும் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் சுப்பையா வித்யாலயம் தொடக்கப்பள்ளியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து காலை உணவை பள்ளி மாணவ மாணவியருக்கு பரிமாறினார் மேலும் அங்குள்ள சமையல் கூடத்தை பார்வையிட்டு ஆய்வு கொண்ட அமைச்சர் கீதா ஜீவன், மாணவ மாணவியரிடம் உணவின் தரம் ருசி எப்படி உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் சரியான நேரத்தில் மாணவ மாணவிகளுக்கு உணவுகள் வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ் குமார், மாமன்ற உறுப்பினர் பாப்பாத்தி அம்மாள், திமுக வட்டச் செயலாளர்கள் சுரேஷ், கதிரேசன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி பாஸ்கர், மணி, மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

