December 1, 2025
#தூத்துக்குடி

அதிமுகவை பலவீனப்படுத்த பாஜக முயற்சி – மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமும் அன்சாரி குற்றச்சாட்டு

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பற்றி கருத்து தெரிவித்த மனிதநேய ஜனநாயகக் கட்சி தலைவர் தமிமும் அன்சாரி கூறியதாவது.  தமிழ்நாட்டில் தங்களது அரசியல் நிலையை தக்க வைத்துக் கொள்ள பாஜக, அதிமுகவை பலவீனப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அதிமுகவை தொட முடியவில்லை. ஆனால், அவர் மறைந்த பின் தலைமை பலவீனத்தை பயன்படுத்தி, கட்சியைப் பிளக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. எடப்பாடி பழனிசாமி கட்சியில் பலம் பெறுவதை பாஜக விரும்பவில்லை. அதனால், செங்கோட்டையனை முன்னிறுத்தி அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயல்கிறது. அதிமுக பலவீனப்படுவது மக்களுக்கு விருப்பமில்லை. கட்சி தலைமை இதை உணர்ந்து புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.

மகாராஷ்டிராவில் சிவசேனாவை பலவீனப்படுத்தியது போலவும், பீஹாரில் நிதிஷ் குமார் மற்றும் ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் நிலையை பாதித்தது போலவும், அதிமுகவையும் பாஜக பலவீனப்படுத்தி வருகிறது என்று குற்றம்சாட்டினார்.அதே சமயம், நாட்டின் பொருளாதார நெருக்கடியில் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதை வரவேற்கிறோம் என தெரிவித்தார்.

காவல்துறை குறித்து:டிஜிபி அலுவலகம் முன்பு நடைபெற்ற மோதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. காவல்துறை அலுவலக வாசலிலேயே இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவது மக்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். இது அரசுக்கு கெட்ட பெயரை தரக்கூடும். எனவே காவல்துறை, உளவுத்துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என தமிமும் அன்சாரி வலியுறுத்தினார்.