தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காயாமொழி ஊராட்சியில், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிய மேல்நிலை நீர்த் தொட்டி அமைக்கப்பட்டு இன்று (03.09.2025) பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.34 இலட்சம் செலவில், ஆதித்தனார் காலனியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்.பி திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், பல்வேறுஅரசு அலுவலர்கள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நீர்த் தொட்டி மூலம், காயாமொழி ஊராட்சியில் நீர்வழங்கல் சீராக நடைபெற வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

