| 12 ஆண்டுகளாக நிரந்தர நியமனம் இல்லை – ஆசிரியர் கூட்டணி குற்றச்சாட்டு. |
கோவில்பட்டி:தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மயில், இன்று 30-08-2025 கோவில்பட்டியில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கை; இதுகுறித்து அவர் கூறுகையில்,
திமுக ஆட்சியில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதற்காக நாங்கள் தனிச்சங்கமாகவும், கூட்டச் சங்கங்களுடன் இணைந்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.
பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 22-ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம்.
இதற்கிடையில், கடந்த 18-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மீண்டும் போராட்டம்;
எனவே, எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும். தற்போது அமைக்கப்பட்டுள்ள குழுவிடம் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வலியுறுத்தியுள்ளோம். அந்தக் குழு எங்கள் சங்கங்களிடம் கருத்துக்களை கேட்டு வருகின்றது. அந்த அறிக்கை பெறப்பட்டவுடன், திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கு மாற்றாக வேறு எந்தத் திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோபத்தில் உள்ளனர்.
மேலும், கடந்த 12 ஆண்டுகளாக தொடக்கக்கல்வித்துறையில் ஒரு நிரந்தர ஆசிரியர்கூட நியமிக்கப்படவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு 2,430 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அரசின் புள்ளிவிவரப்படி 5,500 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் 2,430 மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 3,000 பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். அப்போதுதான் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் உயரும்.
வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசு;
திமுக அரசு இதுவரை எந்த முக்கியவாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஊதிய முரண்பாடுகளை களைவோம் என்ற வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இன்னும் உள்ள 5 மாதங்களில் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்,”என்றார். அதன்பிறகு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கோவில்பட்டி வட்டாரத்தில் பணி ஓய்வு பெற்ற 25 ஆசிரியர்களுக்கு பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர் மணிமொழி நங்கை தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், மாவட்ட துணைத் தலைவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலாளர் கருப்பசாமி வரவேற்றார்.

