தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் பிரதம மந்திரி தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ளது.
| தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: |
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, தூத்துக்குடி மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மூலம் மாவட்ட அளவிலான தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் ஆகஸ்ட் 11, திங்கட்கிழமை காலை 9 மணி முதல் கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் இதுவரை தொழில் பழகுநர் பயிற்சி (Apprentice) பெறாதவர்கள், அரசு மற்றும் தனியார் ஐடிஐயில் தொழிற்பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்றவர்கள், 8ம் வகுப்பு தேர்ச்சி, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞர்கள், பட்டயம் மற்றும் பட்டதாரிகள் என அனைவரும் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.
மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழில் பழகுநர் இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பயிற்சி பெறும் காலத்தில் மாதம் ரூ.7,700 முதல் ரூ.10,000 வரை உதவித்தொகை நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழில் பழகுநர் சட்டம், 1961-ன்படி ஓராண்டு பயிற்சியை முடித்தவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் (NAC) வழங்கப்படும். இந்த சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கும் சிறந்த வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் விவரங்களை அறிய, கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்திலுள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரில் அணுகவும் அல்லது 0461-2340041 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

