December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தமிழகத்தின் மின் வாகன மையமாக தூத்துக்குடி – வின்ஃபாஸ்ட் ஆலையை ஸ்டாலின் திறந்துவைத்தார்

தூத்துக்குடி ,வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் ரூ.16 ஆயிரம் கோடியில் ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் வகையில் தூத்துக்குடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க தமிழக அரசுடன் ஜனவரி 6, 2024 அன்று தமிழ்நாடு அரசு மற்றும்  வின்ஃபாஸ்ட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தானது. அதன் பின்னர் தமிழ்நாட்டின் தொழில் நகரம் தூத்துக்குடியில் அமைந்துள்ளது  சிப்காட் (சில்லானத்தம்) உற்பத்தி வளாகத்தில்,தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 2024 பிப்ரவரி 25 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது .

முதற்கட்டமாக ரூ.1119.67 கோடி செலவில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வின்பாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை 04.08.25 அன்று தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்சார கார் உற்பத்தியை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசியதாவது;

தெற்காசியாவின் மிகப்பெரிய குழுமங்களில் ஒன்று வின்பாஸ்ட். அடிக்கல் நாட்டிய 17 மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவில் உற்பத்தியாகும் வாகனங்களில் 40 சதவீதம் தமிழகத்தில் உற்பத்தியாகிறது. வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு. சென்னைதான் இந்தியாவின் டெட்ராய்ட். நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 200 பேர் இந்த ஆலையில் பணிபுரிய உள்ளனர். இந்த தொழிற்சாலை மூலம் தூத்துக்குடி மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த 90 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மனோதங்கராஜ், தா.மோ. அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.