December 1, 2025
#திருச்செந்தூர்

திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு பணிகளை கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் நேரில் ஆய்வு செய்தனர்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் திருப்பணிகள், யாகசாலை அமைக்கும் பணிகள், பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தடுப்பு அமைக்கும் பணிகள், பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் பணிகளை பாராளுமன்ற திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த குடமுழுக்கு விழாவிற்கான யாகசாலை பூஜைகள் ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது. திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுக்கப்படுகிறது. எனவே, திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா காலங்களில் பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருவதை முன்னிட்டுகனிமொழி கருணாநிதி எம்பி, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு பணிகள்  குறித்து ஆய்வு.

இந்த திருப்பணிகளை விரைந்து முடித்திட கனிமொழி கருணாநிதி எம்பி அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். மேலும், திருக்கோயில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் பக்தர்கள் பாதுகாப்பாக நின்று சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தடுப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், குடிநீர் வசதிகள், சுகாதார வசதிகள், அகன்ற எல்இடி திரைகள் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ள இடத்தினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, ஆலோசனை வழங்கினார்கள்.

மேலும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் இதர பணிகள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்காக 100க்கும் மேற்பட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பக்தர்களுக்கு தேவையான இடங்களில் அன்னதானம் வழங்குவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள். இதைத் தொடர்ந்து, அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டமும் நடைபெற்றது.

ஆய்வின் போது, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திருச்செந்தூர் நகராட்சி தலைவி சிவானந்தி, வருவாய் கோட்டாட்சியர் சுகுமாறன், திருச்செந்தூர் திருக்கோயில் தர்க்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், மற்றும் திமுக மாநில வர்த்தகரணி துணை செயலாளர் உமரி சங்கர், தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பை.மூ.ராமஜெயம், திமுக நகர செயலாளர் சுடலை, துணை செயலாளர் மகாராஜன், மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து, பகுதி பிரதிநிதி பிரபாகர், கோவில் அறங்காவலர்கள், கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள், காவல் துறை அலுவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை அலுவலர்கள், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.