December 1, 2025
#கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு டாக்டர் பணி நீக்கம்;ரூ 40 லட்சம் அபராதமும் விதித்தது மனித உரிமைகள் ஆணையம்!

கோவில்பட்டி: அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்ணை,  கட்டாயபடுத்தி தனியார்  மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்த அரசு டாக்டர் பிரபாகரனுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதித்து, மனித உரிமைகள் ஆணையம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

கோவில்பட்டி அருகே இளையரசனேந்தலைச் சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமி (35). இவரது மனைவி ஜெயா (32).   இத்தம்பதிக்கு 8 வயதில் கண்ணன் என்ற ஒரு மகன் உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி ஜெயா தனது வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது கேஸ் சிலிண்டர் காலியானதால் மாற்று ஏற்பாடாக மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்துள்ளார்.‌ அப்போது எதிர்பாராத விதமாக ஜெயாவின் புடவையில் தீ விபத்து ஏற்பட்டு தீ பற்றி எரிந்து அவரது இடுப்புக்கு கீழே இரண்டு கால்களிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.

இளையரசனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் அவரது குடும்பத்தினர்.

சம்பவத்தன்று கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தீக்காய தீவிர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த அரசு மருத்துவர் பிரபாகர் .

அங்கு அரசு மருத்துவராக பணிபுரிந்த பிரபாகரன் வலுக்கட்டாயமாக தனது தனியார் மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று சிகிச்சை அளித்தார். பல நாட்கள் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அந்தப் பெண் உயிரிழந்தார்.

இதனை தொடர்ந்து  அவரது கணவர் ராணுவ வீரர் மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம், உரிய விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தர மருத்துவ நலப்பணிகள் இயக்குநருக்கு கடிதம் அனுப்பியது. அதன்படி மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் சுவாதி ரத்னாவதி, இணை இயக்குனர் குருநாதன் ஆகியோர் விசாரணை செய்து விசாரணை அறிக்கையை மனித உரிமை ஆணையத்துக்கு அளித்தனர்.

மேலும் இது தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், (மே 19) அன்ற மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு பின்வருமாறு:

அந்த அறிக்கையில், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் குளிரூட்டப்பட்ட தீக்காய பிரிவானது முழுமையாக பயன்படுத்தப்படாமலும் தரமற்று செயல்படுவதாகவும், மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்கள் மருத்துவமனையின் தரத்தை உறுதி செய்திட தவறிய காரணத்தினாலும் 18 நாட்கள் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் 40 நாட்கள் ஜெய் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று இருந்தும் தொற்று அலர்ச்சியால் தீக்காயம் அடைந்த ஜெயா இறந்திருக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அரசு மருத்துவர்கள் குறிப்பாக தீக்காய பிரிவில் பொறுப்பு வகித்தவர்கள் பணியில் கவனமின்றி செயல்பட்டதாலும், மருத்துவர்களின் அறிவுரைப்படி மருந்துகளை பெற்று நோயாளிக்கு நர்சுகள் செலுத்த தவறியதாலும், மருத்துவ பணிகளை செவிலிய கண்காணிப்பாளர், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோர் மேற்பார்வையிட்டுச் சரி செய்யாததே நோயாளியின் இறப்புக்கு காரணம் என்பது தெளிவாகிறது.

புகார்தாரரின் புகாரில் உண்மை இருக்க சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.

மருத்துவமனை பதிவேடுகளில் அடித்தல், திருத்தல் செய்து செவிலியர்கள் குமரேஸ்வரியை நிர்பந்தப்படுத்தி ஆவணங்களை மாற்றம் செய்ததும் தெரியவந்துள்ளது.

மருத்துவர் பிரபாகர், நோயாளிக்கு Meropenem என்ற ஊசியை அளவுக்கு அதிகமாக முரண்பாடாக பயன்படுத்தியதன் மூலம் மருத்துவமனை சார்ந்த தொற்று, பூஞ்சை தொற்று காரணமாக உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு நோயாளி ஜெயா இறப்புக்கு காரணமாக இருந்திருக்கிறது.

அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர் சிந்தன் 2019 ஜனவரி 14ஆம் தேதியன்று ஜெயாவுக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுவதாக பதிவுகள் செய்திருந்த நிலையில், 2019 ஜனவரி 15 மற்றும் 16 தேதிகளில் தீக்காயப் பிரிவில் பொறுப்பில் இருந்த மருத்துவர் ஸ்ரீ வெங்கடேஷ் தீவிர சிகிச்சை எதுவும் செய்யாமல் GC fair, Rpt.all என பதிவுகள் மேற்கொண்டது, டாக்டர் ஸ்ரீ வெங்கடேசின் அலட்சியப் போக்குக்கும்.

பணியில் ஈடுபாடின்மைக்கும், கடமை தவறியதற்கு எடுத்துக்காட்டாகும். எனவே அறுவை சிகிச்சை துறையின் மூத்த மருத்துவரான மருத்துவர் ஸ்ரீ வெங்கடேஷ் அனைத்து மருத்துவர்களுக்கும் வழிகாட்டியாக செயல்படாமல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் சிகிச்சையின் தரத்தை செயலிழிக்க செய்தது தவறாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீக்காயப்பிரிவில் மிகக் குறைந்த உள் நோயாளிகளே இருந்த போதும் சிகிச்சை விவரங்களை சரிவர பகிர்ந்து கொண்டு பாதிக்கப்பட்ட ஜெயாவுக்கு முறையான சிகிச்சை கிடைத்திட உரிய வழிமுறைகளை தீக்காய பிரிவு நர்சுகள் மற்றும் பணியாளர்கள் செய்யவில்லை என தெரிய வருகிறது எனவும்,

செவிலிய கண்காணிப்பாளர் மேற்பார்வை இடாததால் சிகிச்சையில் பங்கம் ஏற்பட்டு நோயாளி இறப்புக்கு காரணமாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ரஷ்யாவில் மருத்துவம் படித்து இந்தியாவில் பதிவு செய்யாத மருத்துவர் பிரியங்காவை ஜெய் மருத்துவமனையில் பயிற்சி பெற அனுமதித்து,

மருத்துவ பரிந்துரை சீட்டை மருத்துவர் பிரியங்கா நோயாளி ஜெயாவை மருத்துவமனையில் அனுமதிக்க பயன்படுத்தியதும் தெளிவாகிறது.

இது இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு புறம்பான செயல். மேலும் சித்த மருத்துவர் அசோக், நோயாளிக்கு ஆங்கில மருந்துகளை பரிந்துரை செய்தும் சிகிச்சை விவர பதிவேட்டில் அதை பதிவு செய்து ஜெய் மருத்துவமனையில் சிகிச்சை வழங்கியதும் தெரிய வருகிறது.

ராணுவ வீரர் கருப்பசாமி அளித்துள்ள புகாரில் பெரும்பான்மையானவை உண்மை என்பது தெளிவாகிறது என விசாரணை அறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் மே 19ஆம் தேதி பிறப்பித்துள்ள உத்தரவில், தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஜெயா உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்திருப்பது தெளிவாகிறது.

மருத்துவர்களும் பணியாளர்களும் கடமை தவறி செயல்பட்டு உள்ளார்கள். குறிப்பாக மருத்துவர் பிரபாகர் பல்வேறு விதிகளை மீறி செயல்பட்டு உள்ளதும், கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தீக்காயப் பிரிவு தரமின்றி செயல்பட்டதும் உண்மை என தெரியவந்துள்ளது.

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் மூத்த அறுவை சிகிச்சை மருத்துவர் ஸ்ரீ வெங்கடேஷ்வர் , மருத்துவர் பிரபாகர், நர்சுகள் குமரேஸ்வரி, குரு லட்சுமி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆகி உள்ளது.

ராணுவ வீரர் கருப்பசாமிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த தொகையை டாக்டர் பிரபாகர் ரூ.40 லட்சமும், டாக்டர் வெங்கடேஸ்வரன் ரூ.2 லட்சமும், ஊழியர்கள் குமரேஸ்வரி, குரு லட்சுமி தலா ரூ.1 லட்சமும், தமிழக அரசு ரூ.6 லட்சமும் வழங்க வேண்டும்.

டாக்டர் பிரபாகரை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்; மீண்டும் அரசு பணியில் நியமிக்கக் கூடாது. அவர் மீது குற்றவழக்கு பதிவு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு டாக்டர்கள் தனியார் மருத்துவமனையில் பணியாற்றுவதை கண்காணிக்க வேண்டும்

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் புகார் பெட்டியை எளிதில் பார்க்கக்கூடிய பகுதியில் பொருத்தி, புகார் தொடர்பாக உயர் அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.