November 30, 2025
#தூத்துக்குடி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி வருகை : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை

by,CN. அண்ணாதுரை 


தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்து பல்வேறு திட்டபணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார்.

இதுகுறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற நவ. 13.11.2024 புதன்கிழமை அன்று சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வருகை தந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடி வருகை தரவுள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முதலாக தூத்துக்குடி வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட எல்லையான மதுரை – தூத்துக்குடி நான்குவழிச் சாலையில் உள்ள புதூர் விலக்கில் மாலை சுமார் 6 மணியளவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. எனவே கழக செயல்வீரா்கள், செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திரளாக கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்தநாள் 14.11.2024 வியாழக்கிழமை அன்று காலை 10 மணியளவில் தூத்துக்குடி – எட்டையபுரம் சாலையில் உள்ள ஏ.வி.எம். கமலவேல் திருமண மண்டபத்தில் நடைபெறும் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு பகல் 12 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டபணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்த உள்ளார்.

மாலை 4 மணியளவில் தி.மு.க பவளவிழா நிறைவை முன்னிட்டு குறிஞ்சிநகர் மெயின் சாலையில் உள்ள மைதானத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிக்கவுள்ளார். பிறகு மாலை 6 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்காக கழக செயல்வீரா்கள் பிளக்ஸ் போர்டு வைப்பதை தவிர்த்திடும்படி கேட்டு கொள்கிறேன். அதற்கு பதிலாக சுவர் விளம்பரம், சுவரொட்டிகள் ஓட்டுதல் ஆகியவை செய்து கொள்ளலாம். கழக கொடியேந்தி வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுபடி கேட்டுகொள்கிறேன்.