December 1, 2025
#தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடியில் புத்தகத் திருவிழா; அமைச்சர் தங்கம் தொன்னரசு தொடங்கி வைத்தார்.

 கனிமொழி.எம்.பி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்பு 

செய்தியாளர்;C.N.அண்ணாதுரை,

தூத்துக்குடி புத்தகக் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா – 2024, தூத்துக்குடி சங்கரபேரி சாலைப் பிரிவில் உள்ள திடலில் 5ஆவது புத்தகக் திருவிழாவை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில், தமிழ்நாடு நிதி, சுற்றுசூழல் – காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். மேயர் ஜெகன் பெரியசாமி வரவேற்புரையாற்றினார்.

விழாவில் கனிமொழி எம்பி அமைச்சர்கள் தங்கம் தொன்னரசு, கீதா ஜீவன் ஆகியோர் புத்தகத் திருவிழா குறித்து சிறப்புரை வழங்கினார்கள்.

இவ்விழா அக்டோபர் 3-ஆம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாலை நேரத்தில் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தில் அழைத்து வரப்பட்டு, புத்தக கண்காட்சியை காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத் திருவிழாக்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் கண்காட்சியாக வைப்பதற்கு தனியாக அரங்கம் அமைக்கப்பட்டது, அந்த புகைப்பட கண் காட்சியையும் அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.

இதில் தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத் திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மக்கள் வாழ்க்கை முறை, மீனவ சமூகத்தின் வாழ்க்கை, தூத்துக்குடி கடற் பரப்புக்கள், நதிக் காட்சிகள். உப்பளங்கள், ஈர நிலங்கள், நகர்ப்புற காட்சிகள் வனவிலங்குகள் மற்றும் ஈரநில பறவைகள், தொழிலாளர்கள் விளையாட்டு போன்ற புகைப்படங்கள் இடம்பெறவுள்ளன.

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மது பாலன் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தினமும் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் பங்குபெறும் சொற்பொழிவு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும், நெய்தல் கலைத் திருவிழா அக். 11 முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இக்கலை திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்

நெய்தல் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தூத்துக்குடியின் சிறப்பு உணவுகளுடன் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய உணவு வகைகளையும் அறிந்து கொள்ளும் வகையில் 40-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

விழாவில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேசியது:

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது, எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் புரிந்து கொள்ள முடியாது.
இன்னொரு வாழ்க்கை விஷயத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள மிகச் சிறந்த வழி புத்தகங்கள் மட்டும் தான்.

முதன் முதலில் கொல்கத்தாவில் இந்தியன் ஏன்சியன்ட் சொசைட்டி (Indian Ancient Society)என்ற அமைப்பு ஆரிய மொழி குடும்பத்தை முன்னிலைப்படுத்தி சமஸ்கிருதம் படித்தால் தான் இந்தியாவைப் புரிந்து கொள்ள முடியும் என்ற முன்னறிவிப்பு முன்வைத்து, சமஸ்கிருதம் இல்லை என்றால் இந்தியா இல்லை. ஆரியம் தான் இந்தியா என்ற கருத்தைப் பரப்பிக்கொண்டிருந்த சமயத்தில், முதல் முதலாக அதற்கு எதிராக எழும்பிய குரல் தூத்துக்குடியிலிருந்து தான். திராவிட மொழிக் குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது. அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை வைத்து திராவிட மொழிக் குடும்பம் தான் எல்லாவற்றுக்கும் முன்னதாக வந்தது என்ற கருத்தை முன்னிறுத்தி, கால்டுவெல் அவர்களின் குரல் தூத்துக்குடியிலிருந்து ஒலித்தது

மறைந்த எழுத்தாளர் கி.ரா அவர்கள் சுகாதாரத்தைப் பற்றி சிறுகதை எழுதியிருந்தார். அந்த சிறுகதையில், அந்த ஊரில் ஒரு அதிகாரி சுகாதாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என்று பாடு படுகிறார். சுகாதாரத்திற்குக் கழிவறை கட்டிவிட்டால் போதாது, அதையும் தாண்டி என்னென்ன பிரச்சனைகள் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பது ஒன்று ஒன்றாகச் சொல்லி கடைசியில் கிராம மக்கள் கட்டப்பட்ட கழிவறையை சுற்றி முள்வேலி அமைத்து, யாரும் உள்ளே போகக் கூடாது என்று செய்தார்கள். யாரும் உள்ளே போகக்கூடாது, ஏன் என்று அந்த கதையைப் படித்தால் தான், நிதர்சனத்தில் மனிதர்கள் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் புரியும்.

அதனால் தான் கலைஞர் தான் வாழ்நாள் முழுவதும் புத்தக வாசிப்பின் வழியாகப் புரிந்து கொண்டு, எந்த ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும், அனைத்து மக்களுக்கும் சென்று சேர கூடிய ஒன்றாக, அந்த திட்டத்தை மாற்றிக் கட்ட முடிந்தது. மனிதனுடைய வாழ்க்கையில் அடிப்படையைக் கலைஞரால் புரிந்து கொள்ள முடிந்தது.

புத்தக வாசிப்பு என்பது மட்டுமே நம்மைத் தெளிவுபடுத்தும்:-

நமக்கான சரியான ஒரு பாதையை உருவாக்கித் தரும். தலைமைத்துவம் என்பது மனிதனைப் புரிந்து கொள்வது மட்டும் தான். அதனால், புத்தகம் படியுங்கள், வாசியுங்கள் அது மட்டும் தான் உங்களுக்கு உங்கள் கைகளுக்குள் உலகத்தைக் கொண்டு வந்து சேர்க்கக்கூடிய ஒன்று என்று பேசினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், துணை ஆட்சியர் (பயிற்சி) சத்யா கோட்டாட்சியர் பிரபு, மாநகர காவல் துணை கண்காணிப்பாளர் டாக்டர் மதன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், கலைச்செல்வி, அன்னலெட்சுமி, வட்டாட்சியர் முரளிதரன், சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொற்செல்வன், மாநகரட்சி நகர்நல அலுவலர் வினோத்ராஜா, வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், சமூகநல அலுவலர் பிரேமலதா, மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார், அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல், திமுக மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், செல்வக்குமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்ராஜா, கஸ்தூரிதங்கம், மாநகர துணை செயலாளர்கள் கீதா முருகேசன், கனகராஜ், பிரமிளா, இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப்,

ஐ.டி விங் நாகராஜ், அருணா தேவி, அண்ணாதுரை மற்றும் கருணா, பிரபாகர், ஜோஸ்பர் , அல்பர்ட், திமுக வட்டச் செயலாளர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன் நன்றி கூறினார்.