December 1, 2025
#திருச்செந்தூர்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் பெயரில் தகடுகள் விற்பனை – நிர்வாகம் எச்சரிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் (யந்திரங்கள்) விற்பனை செய்யவோ, பணம் வசூலிக்கவோ யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவின் முதல் நாளன்று யாகசாலையில் வெள்ளி மற்றும் செம்பு தகடுகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர் சூரசம்ஹார நாளன்று அந்த தகடுகள் யாகசாலையிலிருந்து எடுக்கப்பட்டு, கோயில் அலுவலகம் மூலம் மட்டுமே பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

சஷ்டி யாகசாலை தகடுகள் விற்பனை” என்ற பெயரில் இன்ஸ்டாகிராம், முகநூல்;

ஆனால் சமீபத்தில் சிலர் “சஷ்டி யாகசாலை தகடுகள் விற்பனை” என்ற பெயரில் இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள், வீடியோக்களை வெளியிட்டு பக்தர்களிடமிருந்து பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள் என்பது நிர்வாகத்தின் கவனத்துக்கு வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் பெயரில் எந்த தனிநபருக்கும் அல்லது அமைப்பிற்கும் தகடுகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.

சமூக வலைதளங்கள் வழியாக வரும் தவறான இணைப்புகள், விளம்பரங்கள் மூலம் பணம் செலுத்த வேண்டாம்.

இப்படிப்பட்ட மோசடி முயற்சிகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம்” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயிலின் பெயரை தவறாகப் பயன்படுத்தி பக்தர்களை ஏமாற்ற முயலும் நபர்கள் மீது காவல் துறை வழியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.