தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகர பட்டினத்தில் கடந்த 23.09.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழா, வரும் 02.10.2025 அன்று சூரசம்கார நிகழ்வும், 03.10.2025 அன்று காப்பு தரித்தல் நிகழ்வும் நடைபெற்று நிறைவடைகிறது.
திருவிழாவின் முக்கிய நாட்களான அக்டோபர் 1 முதல் 3 ஆம் தேதி வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சுமார் 3500 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க 20க்கும் மேற்பட்ட குற்றப்புலனாய்வு காவல்துறையினர் (Crime Team) 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர ரோந்து மேற்கொள்வர்.காவல்துறையின் 2 ட்ரோன கண்காணிப்பு குழுவினர், கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பர். முக்கிய இடங்கள் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை நேரடியாக கண்காணிப்பு திரையில் பார்வையிடப்படும். காணாமல் போன குழந்தைகள் மற்றும் பக்தர்களை கண்டறிந்து உறவினர்களிடம் ஒப்படைக்க ஆண் மற்றும் பெண் காவல் குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடற்கரையில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்புக்காக நீச்சல் தெரிந்த காவல் பேரிடர் மீட்பு குழுவினரும் பணியில் ஈடுபடுகின்றனர்.

திருவிழா முடிந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, அதுகுறித்து அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் தேவைகள், குறைகள் தொடர்பாக 9498101852, 9498101833, 0461-2340393 மற்றும் தூத்துக்குடி காவல்துறை ஹலோ போலீஸ் எண் 9514144100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்

என அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, அனைத்து பக்தர்களும் தசரா திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

